2026 சட்டமன்றத் தேர்தலுக்கான
தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழாவின்
ஐம்பெரும் முழக்கங்கள்!
அன்பார்ந்த உழைக்கும் மக்களே! ஜனநாயக சக்திகளே!
மார்ச் 7, 2026 அன்று மதுரையில் எமது அமைப்புகளின் சார்பில் நடைபெற்ற தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழாவில், கீழ்க்காணும் ஐம்பெரும் முழக்கங்கள் முன்வைக்கப்பட்டன. இப்பெருவிழாவில் பங்கேற்ற ஜனநாயக சக்திகள், மக்கள் அனைவராலும் பெரிதும் வரவேற்கப்பட்டு தீர்மானங்களாக ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
ஆணவப் படுகொலைக் குற்றவாளிகளின் சொத்துக்களைப் பறிமுதல் செய்வது; ஆணவப் படுகொலைகள் மற்றும் சாதி வெறியாட்டங்களைத் தூண்டிவரும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. சங்கப் பரிவார அமைப்புகள், ஆதிக்கச் சாதிவெறிச் சங்கங்களைத் தடை செய்வது; ஆணவப் படுகொலைக்கு உள்ளானவர்களின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்குவது உள்ளிட்ட அம்சங்களைக் கொண்ட ஆணவப் படுகொலைத் தடுப்புச் சிறப்புச் சட்டம் இயற்று!
சாதி, மத மறுப்பு மணங்களை மக்கள் முன்னிலையில் அரசே முன்னின்று நடத்தி அங்கீகரி! சாதி, மத மறுப்பு மணம் புரியும் இணையர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கு! ஊக்கத்தொகை வழங்கு! சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்து! மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் “சாதி, மதமற்றவர்” என்று பதிவு செய்ய தனிப்பிரிவை உருவாக்கு! “சாதி, மதமற்றோர்” என சான்றிதழ் பெற்றவர்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்கு!
டாஸ்மாக்கை மூடு – போதைப் பொருட்களைத் தடை செய்! பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்காத போலீசு அதிகாரிகளைத் தண்டித்திடு பெண் கல்வி, பெண் சுதந்திரத்தை மறுக்கும், பெண்களை போகப் பொருளாக்கும் ஆபாசத் திரைப்படங்கள், இணையதளங்கள், நாடகங்கள், புராண இதிகாசங்கள் உள்ளிட்டவற்றைத் தடைசெய்!
கீழடி தொல்லியல் புதையல்கள், பழங்காலத் தமிழ்க் கல்வெட்டுகள், சமணர் குகைகள் போன்ற தமிழர் நாகரீகத்தின் தொட்டிலாகவும், இந்தித் திணிப்பு எதிர்ப்பு – டங்ஸ்டன் சுரங்கத் திட்ட எதிர்ப்பு – ஐல்லிக்கட்டுப் போராட்டங்களின் தொடக்கப்புள்ளியாகவும், விடுதலைப் போரின் தொடக்கப்புள்ளியாகவும், திருப்பரங்குன்றம், பறம்பு மலை என மதநல்லிணக்க அடையாளங்களின் தாய்மண்ணாகவும் பார்ப்பனிய எதிர்ப்பு நாட்டார் தெய்வ, குல தெய்வ வழிபாடுகளின் அடையாளமாகவும் திகழ்கின்ற மதுரை மண்டலத்தை தமிழ்ப் பண்பாட்டு மண்டலமாக அறிவி! இந்த மரபுக்கு எதிராகச் செயல்படும் ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. சங்கப் பரிவார அமைப்புகள், ஆதிக்கச் சாதிவெறிச் சங்கங்களைத் தடை செய்!
இயற்கை வளங்களைச் சூறையாடும், விவசாயம், சிறு-குறு வணிகத்தை அழிக்கும். கல்வி, மருத்துவத்தைப் பண்டமாக்கும், தொழிலாளர் உரிமைகளைப் பறிக்கும் கார்ப்பரேட் கொள்கைகள், திட்டங்களைக் கைவிடு! தமிழ்நாட்டை ஆக்கிரமித்துள்ள மார்வாடி கும்பலை வெளியேற்று!
இக்கோரிக்கைகளை இந்த சட்டமன்றத் தேர்தலில் விவாதப் பொருளாக்குவதுடன் தேர்தல் முடிந்து புதிதாக அமைக்கப்படும் ஆட்சியில் இக்கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு மக்கள் போராட்டங்களைக் கட்டியமைக்க வேண்டும்.
அதேவேளையில், நமது நாட்டில் தற்போது நிலவுகின்ற போலி ஜனநாயக அரசு அதிகாரத்தைப் பயன்படுத்தி ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. கும்பல் அம்பானி, அதானி, அகர்வால் போன்ற கார்ப்பரேட் முதலாளிகளுக்கான பாசிச சர்வாதிகாரத்தை அரங்கேற்றி வருகிறது; மக்களின் உரிமைகளை நசுக்கி வருகிறது. ஆகையால், இந்த அரசுக் கட்டமைப்புக்கு மாற்றாக, பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசைக் கட்டியமைப்பதுதான் உழைக்கும் மக்கள் தமது உரிமைகளை நிலைநாட்டிக் கொள்வதற்கு ஒரே தீர்வாகும்.
அந்தவகையில், போராடும் ஜனநாயக சக்திகளுடன் இணைந்து மேற்கண்ட ஒவ்வொரு கோரிக்கைகளுக்காகவும் தேர்தலுக்கு வெளியே மாநில, மாவட்ட, வட்டார அளவிலான ஜனநாயகத்திற்கான மக்கள் கூட்டமைப்புகளைக் கட்டியமைப்போம்!